
‘சாருகேசி’ – இசையும் நினைவுகளும் இணையும் உணர்வுப்பூர்வ குடும்பக் காவியம்
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தேனிசைத் தென்றல் தேவா இசையமைப்பில் வெளியாகியுள்ள ‘சாருகேசி’, இசை மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணர்வுப்பூர்வமான திரைப்படமாக அமைந்துள்ளது.
கர்நாடக இசை உலகில் புகழ்பெற்ற பாடகராக விளங்கும் ஒருவர், அல்சைமர் நோயால் நினைவுகளை இழக்கத் தொடங்குகிறார். அந்த சூழலில், தந்தையின் இசை மரபிலிருந்து விலகிச் சென்ற மகனுடனான உறவு எவ்வாறு புதிய பரிமாணம் பெறுகிறது என்பதையும், குடும்பத்திற்குள் ஆண்டுகளாக மறைந்து கிடக்கும் மனக்காயங்களை இசை எவ்வாறு இணைக்கிறது என்பதையும் படம் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலமாக அதன் உணர்ச்சிகரமான திரைக்கதை திகழ்கிறது. குடும்ப உறவுகளின் அருமையையும், தலைமுறைகளுக்கு இடையிலான புரிதலின் அவசியத்தையும் படம் இயல்பாக எடுத்துரைக்கிறது. குறிப்பாக இறுதிக்கட்ட காட்சிகள் பார்வையாளர்களை ஆழமாகத் தொட்டு மனதில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இசையமைப்பாளர் தேவா, தனது அனுபவத்தை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது. இசையே படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக செயல்படுகிறது என்று சொல்லலாம்.
நடிப்பைப் பொறுத்தவரை, சத்யராஜ் தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். சுஹாசினி, தலைவாசல் விஜய், ராஜ் ஐயப்பன், ரம்யா பாண்டியன் ஆகியோர் தங்களது பாத்திரங்களை நேர்த்தியாக கையாள்ந்துள்ளனர். சிறப்பு தோற்றங்களில் வரும் சமுத்திரக்கனி, மதுவந்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு வலுசேர்க்கிறது.
மொத்தத்தில், ‘சாருகேசி’ வெறும் குடும்பக் கதையாக இல்லாமல், நினைவுகள், இசை மற்றும் மனித உறவுகளின் மதிப்பை உணர்த்தும் ஒரு மனதை வருடும் அனுபவமாக திகழ்கிறது.
மதிப்பீடு 3.5/5
